Friday, May 15, 2009

வார்த்தைகளின் வலிமை

முனிவர் ஒருவர் ஒரு கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பெண் உடல்நலமில்லாத குழந்தை ஒன்று அருகில் இருப்பதாகவும், அதை குணமாக்க உதவுமாறும் வேண்டினாள்.முனிவரும் அதற்கிணங்கினார்.

அவரைப்போன்றவரை காண்பது அரிதென்பதால் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது. அந்தப்பெண் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார்.

"எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா..?" என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான்.

"உனக்கு அது குறித்து என்ன தெரியும்..? நீ ஒரு அறிவில்லாத முட்டாள்" என முனிவர் அம்மனிதனுக்கு பதிலுரைத்தார்.

அந்த வார்த்தைகளால் உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் அவமானப்பட்டதாக நினைத்தான். அவனுடைய உடல் சூடாகி முகமெல்லாம் சிவந்தது. அந்த முனிவரை திட்ட அல்லது அடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.

புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், " நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.

வார்த்தைகளின் வலிமை அந்த மனிதனுக்கு புரிந்தது.

2 comments:

வடுவூர் குமார் said...

சரி தான்.
பகிர்வுக்கு நன்றி.

நிகழ்காலத்தில்... said...

எளிமையான, ஆழமான விளக்கம்.

வாழ்த்துக்கள்..

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..