செல்வதாஸ் - நவம்பர் 17
செல்வதாஸின் திறமையைக் கண்ட பின்னர் "குறிப்பிட்ட சிலர்" எரிச்சலடைந்தனர். அவருடன் விவாதத்தில் ஈடுபட்டு அவரை வெல்வதென்பது அநேகமாக நடக்காத காரியமாக மாறி விட்டிருந்தது.
அதன்பின்னர் நடந்த பல்வேறு விசயங்களில் செல்வதாஸ் மிகுந்த மனவேதனை அடையும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை நினைவுகூரவும் எனக்கு விருப்பமில்லை. மீண்டும் நடந்த தொழிற்சங்கத் தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். அவரது தோல்வியை முதலில் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
விழிக்காக "காயம்" என்கிற கதையை அவர் இரண்டு பாகங்களாக எழுதிக்கொடுத்தார். முதல் பாகம் ஒரு விழி இதழில் வெளிவந்தது.
அதன் பின்னர் அவர் எப்போதும் ஒரு சோர்வுடனே காணப்பட்டார். அடிக்கடி " அண்ணாச்சி.. எனக்கென்னமோ இனி ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு தோணுது. நீங்கதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்" என்று சொல்வார். முதலில் அது பற்றி எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அவர் திரும்பவும் சொல்லும் போது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்தது.
சந்தானம் அண்ணாச்சியுடன் பேசும் போது அவரும் இதைக்குறிப்பிட்டார். " என்னா..இது..? இப்டியே பேசுதாப்ல... எல்லாரும் ஒரு நா போயி சேர வேண்டியதுதா.. இது ஒரு விசயம்னு..." என்று சற்று கோபத்துடன் சொன்னார்.
மேலும் சில வாரங்கள் உருண்டோடின. பால்ராஜுடன் ராஜ் திரையரங்கில் காலைக்காட்சியாக ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது தூத்துக்குடியை நோக்கி சில நெருங்கிய நண்பர்கள் வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். இத்தனை நபர்கள் ஏன் இவ்வளவு வேகமாக செல்கின்றனர் என்று முதலில் புரியவில்லை. மேலும் ஒரு வாகனத்தில் இரு நண்பர்கள் வந்ததைக் கண்டு அவர்களை நிறுத்தி விசாரித்தேன்.
அந்த அதிர்ச்சி தரும் தகவலை சொன்னார்கள் அவர்கள்... செல்வதாஸ் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கேள்விப்பட்டதும் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளானேன்.
உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு சென்றோம். அதிகாலை நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் பேருந்தை நிறுத்தி ஏற முயற்சி செய்த போது, தவறி விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் அவரது வயிற்றில் ஏறி விட்டதாகவும் அதனால் அங்கேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் தகவல் சொன்னார்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை. பிரேத பரிசோதனைக் கிடங்கில் சில நிமிடங்களுக்கு மேல் "அண்ணாச்சி"யைக் காண என்னால் முடியவில்லை. எப்போதும் போல வெள்ளைச்சட்டையும் கருப்பு கால்நிற சட்டையும்தான் அவர் அணிந்திருந்தார்.
செல்வதாஸ் அண்ணாச்சியை தொழிற் சங்க கட்டடதிற்கு கொண்டு வந்த பின்னர் அனைவரும் மரியாதை செலுத்தினர். துயில் கொண்டது போல இருந்தார் அண்ணாச்சி. நெற்றியில் மட்டும் ஒரு சிறிய கீறல் இருந்தது. அங்கிருந்து குடியிருப்பு வாயில் வரை, அது வரை யாருமே பார்த்திராத அளவுக்கு சாலையை நிறைத்து அனைவரும் மெளனமாக நடக்க, அண்ணாச்சி அவரது சொந்த ஊருக்கு மீளாத்துயில் கொள்ள புறப்பட்டார்.
எளிமையான எத்தனையோ பெரிய தலைவர்களைப்பற்றி பலமுறை படித்திருக்கிறேன். ஆனால் நேரில் கண்டதில்லை. ஆனால் செல்வதாஸ் அண்ணாச்சியுடன் வாழ்ந்த அந்த சில காலம் என்னால் எப்போதும் மறக்க முடியாதது. இவை தேதியில்லா குறிப்புகள் என்றாலும் அண்ணாச்சி பிரிந்த அந்த நவம்பர் 17 எப்போதும் என் மனதை உறுத்திக்கொண்டேதான் இருக்கும்.
ஒரு முறை அவர் வாழ்ந்த வீட்டுக்கு அவரைக் காண்பதற்காக சென்றிருந்தேன். பொதுவாக அங்கு வாழ்ந்த எத்தனையோ நண்பர்களின் வீடுகள் ஆடம்பரப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை மட்டுமே பார்த்தவன் அவர் வீட்டைக் கண்டு அயர்ந்து போனேன்.
அவரது வீட்டில் நான் பார்த்தவை :- தூங்குவதற்கு ஒரு கோரைப்பாய், இரண்டு வெள்ளைச்சட்டைகள், இரண்டு கருப்பு நிற கால்சட்டைகள், ஒரு துண்டு, ஆலையில் பணிபுரியும் போது அணிய வேண்டிய சீருடை, காலணி,காலணியுறைகள், ஒரு மேசை, ஒரு நாற்காலி (இவை இரண்டும் தொழிற்சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சங்க அலுவலுக்கு தேவைப்பட்டதால் அவர் சொந்தமாக வாங்கியவை), சில வெண்குழல் பாக்கெட்டுகள்... இவை மட்டுமே...!
எளிமையை எனக்கு உணர்த்திய அன்பு அண்ணாச்சியை, எப்போதும் மனிதத்துவத்தை உணர்த்திய அந்த அன்பு உள்ளத்தை நினைவில் குறித்துக்கொள்வதை விட, மனத்தில் என்றும் இருத்திக்கொள்வதே நான் செய்த பேறு.
Friday, January 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment