Sunday, January 09, 2005

செல்வதாஸ்-2

ஆரம்பத்தில் ஜெனரல் ஷிப்ட் என்றழைக்கப்பட்ட காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்தரை மணி வரையான வேலைக்குத்தான் சென்று கொண்டிருந்தேன். எப்போதாவது அவரைப்பார்த்தால் மெதுவாக புன்முறுவல் அவரிடமிருந்து வரும்.

நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தோம். தனக்கு பிடித்தவர், பிடிக்காதவர் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பேசக்கூடியவராகத்தான் இருந்தார். ஆனால் அவரிடம் பேசுபவர்கள் எப்போதும் அவரைப்பற்றி முன்கூட்டியே திட்டமிட்டு பேசுவது போல எனக்குத்தோன்றியது. இன்னும் சொல்லப்போனால் பல நேரங்களில் அவருடைய துறை மேலாளர் கூட அவரிடம் பேசுவதை தவிர்ப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவருடன் நான் பேசுவது அதிகமானதற்கு காரணம் அங்கே பணிபுரிந்து வந்த மரியாதைக்குரிய சந்தானம் அண்ணாச்சி, செவ்வேள் உள்ளிட்ட சில நண்பர்கள் காரணம். "பேகிங்" பகுதியில் பணி புரிந்து வந்த மற்றவர்களை பற்றி பேச இது சமயமில்லை.

எப்போதும் வட்டார வழக்கு மொழியைக்கற்றுக்கொண்டு அதிலேயே பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் சொந்த ஊரின் "அண்ணே".. என்பதை விடுத்து, செல்வதாஸை "அண்ணாச்சி" என்று அழைப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. அவர் என்னைக்காட்டிலும் பல வயது மூத்தவர். ஆனால் அவரும் என்னை 'அண்ணாச்சி' என்றே அழைப்பார். அவர் அப்படி அழைக்கும் போது மிகவும் கூச்சமாக இருக்கும். ஆனால் நாளாக நாளாக வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

சில மாதங்களுக்குப் பின் "ஷிப்ட்" முறை பணிக்கு வர பணிக்கப்பட்டேன். அதன்பின்னர் எங்களிடையே ஆன நெருக்கம் கொஞ்சம் அதிகமானது.

அவரது நேரிடையான பேச்சு, ஆழ்ந்த சிந்தனை, அறிவு எனக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அவரை ஏன் எல்லோரும் இகழ்ந்து பேசுகிறார்கள் என்று அப்போது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அவரது உருவம் ஒருவேளை காரணமாக இருக்குமோ என்று மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம்.

அவருக்கு எப்போதும் சமூகத்தின் மீதான அக்கறை அதிகமாக இருக்கும். மனித நேயத்துடன் கூடிய அவருடைய பார்வையில் எந்த ஒரு விசயத்தையும் அக்குவேறு ஆணிவேராக அலசிப்பார்க்கும் திறமையைக் காண முடியும்.

வாரத்தின் ஆறு வேலை நாட்களில் மூன்று நாட்கள் அவரும் நானும் ஒரே நேரத்தில் வேலைக்கு வருவதாக அமைந்திருந்தது. அவருடைய பணியும் என்னுடைய பணியும் வேறு வேறு என்றாலும் வேலை இல்லாத சமயங்களிலும், ஓய்வு நேரங்களிலும், சாப்பிடும் நேரங்களிலும் அவருடன் இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

வெறுமனே திரைப்படங்கள், புத்தகங்கள் என்று ஆரம்பத்தில் பேச ஆரம்பித்தது தொழிற்சங்கத்தைப் பற்றி பேசுவது அதிகம் என்றாகிவிட்டது. தன்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு நல்லதே செய்ய வேண்டும் என்கிற அவருடைய ஆர்வம் கொஞ்சமாக என்னையும் தொற்றிக்கொண்டது.

சாதாரணமாக ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பித்தால் என்ன என்கிற கேள்வி பிறந்தது.

அப்போது வேறு சில நண்பர்கள் "ஸ்வரங்கள்" என்கிற கையெழுத்துப்பிரதியை நடத்திக்கொண்டிருந்தார்கள். கையெழுத்துப்பிரதி என்றால் என்ன என்பதையே நான் அப்போதுதான் அறிந்தேன். ஒரு முறை பிரதீப்பின் உதவியால் அந்த ஸ்வரங்கள் என்கிற கையெழுத்துப் பத்திரிக்கையை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

பலவண்ண காகிதங்களில் கலர் கலராக ஓரளவுக்கு அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த அதைப் பார்த்ததும் வியப்பும் சந்தோசமும் ஏற்பட்டது.

No comments: