காண்பவர் கண்களில்....
ஒரு கடைக்காரர் அவரது கடையினுள் ஒரு நாய் நுழைந்ததைக் கண்டு அந்த நாயை விரட்டி விட்டார். ஆனால் அந்த நாய் மறுபடியும் கடையினுள் வந்தது. கடைக்காரருக்கு கோபம் வந்தது. நாயை அடிப்பதற்காக அதனருகில் சென்றார். அப்போதுதான் நாயின் வாயில் காகிதம் இருப்பதை கவனித்தார். அதன் அருகில் சென்று அந்த காகிதத்தை எடுத்தார். அதனுடன் பணமும் இருந்ததைக் கண்டார். "குளியல் சோப் இரண்டும் ஷாம்பூ ஒன்றும் தேவை" என்று எழுதி இருந்தது. பணத்தை எடுத்துக்கொண்ட கடைக்காரர் கேட்டிருந்த சோப், ஷாம்பூ மற்றும் மீதி பணத்தை ஒரு பையில் வைத்து அதன் வாயில் வைத்ததும் அது நன்றாக பையை பிடித்துக்கொண்டது.அந்த நாயும் கடையை விட்டு வெளியேறியது.
அந்த நாயின் நடவடிக்கைகளைக் கண்ட அந்த கடைக்காரர் மிகவும் வியப்புற்று அந்த நாயைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏற்கனவே கடையை மூடும் நேரமானதால் கடையை மூடி விட்டு நாயை பின் தொடர ஆரம்பித்தார்.அந்த நாய் சாலையில் பாதசாரிகள் நடக்கும் பகுதியிலேயே நடந்தது. சாலையைக் கடக்கும் இடத்திற்கு வந்ததும் நின்றது. போக்குவரத்து விளக்கு "பச்சை" நிறத்தில் ஒளிரும் வரை காத்திருந்து பின்னர் கடந்தது. பின்னர் அடுத்து இருந்த பேருந்து நிலையத்திற்கு சென்றது. பேருந்து கால அட்டவணையை கவனமாகப் பார்த்து விட்டு, பேருந்தின் வரவை எதிர் நோக்கி காத்திருக்க ஆரம்பித்தது.
குறிப்பிட்ட பேருந்து வந்ததும், ஏறும் வழியைக் கண்டு அதில் தாவி ஏறியது; கடைக்காரரும் பின் தொடர்ந்தார். நடத்துனர் முன் சென்று தன் வாயில் இருந்த பையை கீழே வைத்து தலையை ஆட்டியது. கண்டக்டர் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு, பயணச்சீட்டை நீட்டவும் அதை வைக்க தனது கழுத்துப்பட்டையை காட்டியது. கடைக்காரருக்கும் அதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் சொல்லவொண்ணா வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.அதன் பிறகு அந்த நாய், பையைக் கவ்விக்கொண்டு வெளியேறும் வாசல் அருகே காத்திருக்க ஆரம்பித்தது. அது இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் தனது வாலை வேகமாக ஆட்டி, ஓட்டுநரை பேருந்தை நிறுத்துமாறு குறிப்பால் உணர்த்தியது.
பேருந்து முழுமையாய் நிற்கும் வரை பொறுக்காமல், அவசரமாக குதித்து இறங்கியது. அருகில் இருந்த வீட்டை நோக்கி ஓடியது. பெரிய இரும்பு கேட்டை திறந்து முன்புறக் கதவை நோக்கி ஓடியது. கதவை அடையும் முன், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டது. தோட்டத்தின் வழியாக பின்புறமாக நடந்து சென்று, அங்கிருந்த ஜன்னலின் கதவில் தனது தலையால் பலமுறை முட்டியது.பின்னர் மறுபடியும் தோட்டத்தின் வழியே நடந்து வந்து, முன்புற வாசலில் காத்திருந்தது. நடப்பது அனைத்தையும் கடைக்காரரும் நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒரு மனிதன் முன்புறக்கதவை திறந்தான். திறந்ததும் அந்த நாயை திட்டிக்கொண்டே, அடிக்கவும் உதைக்கவும் ஆரம்பித்தான் அம்மனிதன். கடைக்காரருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. வேக வேகமாக அவனிடம் சென்று "அடக்கடவுளே... இந்த நாய் எவ்வளவு புத்திசாலியானது! அதைப் போய் அடிக்கிறாயே... நீயெல்லாம் மனிதனா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதன்...."இந்த நாயையா புத்திசாலின்னு சொல்ற. இந்த வாரத்துல மூணாவது தடவையா வாசல் சாவிய எடுத்துட்டுப் போக மறந்த இதுவா புத்திசாலி?" என்றான்.
நீதி: பார்ப்பவர்களின் பார்வையில் வேண்டுமானால் நீங்கள் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவராக தோன்றலாம். ஆனால் எப்போதுமே உங்களால் உங்கள் எஜமானரின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவே இயலாது.
நன்றி : மின்னஞ்சலில் ஆங்கிலக்கதை அனுப்பிய நண்பருக்கு.
2 comments:
நல்ல கதை..
நல்ல நீதி..
arumai thozla thodranthu eluthungal
ungal anbae sivam endrathu romba pidichirukku
Post a Comment